1.10.15

வெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை



வெள்ளி இழைகளை
விழிகளையுரசும்  நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்

சேரும் இடைவெளியில்
தம்மை
வலுவற்றவையாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்

ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்

தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு திரையிருப்பதை
இருக்கையில்
அடுத்திருந்தவன்தான்
அறியத் தந்தான்

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'


(கணையாழி /அக்டோபர்-2015 இதழ் கவிதைகளில்
பரிசுக்குத்தேர்வான கவிதை)

நன்றி: கணையாழி / அக்டோபர்-2015 இதழ்




9.9.15

இரண்டு கவிதைகள்



1)

தேவன்
வானுலகிலிருந்து ஏவிய
மழையில் தொடங்கி,
வலுத்து
வெளியே
தெருக்கள்தோறும் புரளும்
பெருவெள்ளம்.

நோவாவின் பேழையென
மிதந்திருக்கும்
பலமற்ற அஸ்திவாரத்திலான
ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில்
உறைந்திருக்கிறோம் பிழைத்து,
நீ
நான்
குழந்தைகள்
சுவரில் பல்லி
சிலந்தி
மற்றும்
தரையில் சிற்றெறும்புகள் சில.

கூரை விரிசலில் ஒழுகி,
சரியாக
நெகிழியில்
சரியும் நீர்,
சற்றுமுன்தான்
சந்தையில் துள்ளி
இந்த சமையலறையில்
விழுந்த மீன்களை,
நீந்தப்பண்ணிவிட
பரபரப்பதை கவனித்தாயா...


2)

நிலவை
குடைந்து செய்த கோப்பையோடு
நீ பரிமாறிய
நீர்ம இரவில்
போதாமை என்கிறேன்

சிறு கரண்டி துருத்திக்கொண்டிருக்கும்
கிண்ணத்தை
என் பக்கமாக நகர்த்துகிறாய்

கொஞ்சமும் நக்ஷத்திரங்களைச் சேர்...


- நன்றி: ‘காலச்சுவடு’ செப்டெம்பர் 15 இதழ்