18.10.11

நிழல்

 

வண்ணங்கள் படைத்தலின்
பிதா நான்
என்னும்
கர்வம் கொண்டிருந்த என்னை
அதனியல்பிலிருந்து
பரிகாசம் செய்கிறது
தூரிகையில் எடுத்த
நிறத்தின் நிழல் 

              

17.10.11

தற்கொலையை விவரித்தல்



உடைந்து
சிதறி
தெறித்து
சரிந்து
கலந்து
தத்தளித்து
துடிதுடித்து
கொப்பளித்து
குமிழியிட்டு
மூச்சுத்திணறி
மெதுமெதுவாய் அடங்கி
மீட்டுருக்கொண்டு
மிதக்கிறது கிணற்றில்
அம்புலியின்
மரணத்தின் கறை படிந்த
ஒரு பிரதிபிம்பம்.

13.10.11

சீதைப்பாஞ்சாலி



இன்று
நாடகத்தில் சீதை பாத்திரமெனக்கு

என் கண்ணீர் குடித்தே வளர்ந்துவிட்டது
மேடையோடு வீற்றிருக்கும்
அசோகவனத்தின் மரமொன்று

இராமனுக்காகவே காத்திருந்து காத்திருந்து
தேய்ந்துகொண்டிருக்கிறது காலம்

கதைப்படி,
ஆகாரம் கொண்டுவரும் அரக்கிகளை
தவிர்க்கிறேன்
புராணச்சீதையின்
புதுப்பித்த கோபத்தோடு

என் அபயக்குரல்
அரங்கெங்கிலும் ஒலித்த நேரம்
ஒப்பனை அறையிலிருந்து
ஓடிவந்தான் அனுமன்

சிந்தும் விழிநீர்
உதட்டோரம் உப்புக்கரிக்க
வசனம் பிசகி
வார்த்தை வந்தது இவ்வாறு

அனுமனே
இராவணன் கூட கண்ணியன்தான்
எனவேதான்
என் கற்பு இன்னும் களவுபோகாதிருக்கிறது

விந்தை காண் வாயுபுத்ரனே,
பார்வையாளர் பார்வையெல்லாம்
என் மேலாடயை கிழித்தல்லவோ
மேனியை புசிக்கிறது!

அவையில்
ஆயிரம் துச்சாதனர்கள் இவர்கள்
ஒரேயொரு பாஞ்சாலி நான்
சீதையல்ல

அதனாலே செப்புகிறேன்
எனை மீட்க
இராமனை வரவழை பிற்பாடு
மானம் காக்க
கண்ணனை அழை இப்போது

- நன்றி, U M T.ராஜாவுக்கு

12.10.11

ஆறு கவிதைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி




1)
பின் மண்டையில் அழுத்தி
சுடப்பட்டவன் நெற்றியை
துளைத்துக்கொண்டு
வெளியேறுகிறது குண்டு

முன்னதாக
தெறித்து விழுந்தது
நெற்றிக்கண்

2)
புதிதாய்
நான் வாங்கியிருக்கும்
கைத்துப்பாக்கியில் சுட்டுப்பழக
ஆட்கள் தேவை

3)
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
மிரட்டி நிற்கும்
அவனின் விரல்
எப்போது சுண்டும் ட்ரிக்கர்-

துப்பாக்கியில் எழும்பும்
டுமீல் இசை
எனக்கு ரொம்ப பிடிக்கும்

4)
இறந்துபோனதென்று
தகவல் வந்தது,
பேட்டரி வாங்கிச்செல்லவேண்டும்
நிஷித்-தின் துப்பாக்கிக்கு

5)
அன்புள்ள திருடனுக்கு
என் தலையணையின் கீழ்
ஒரு பிஸ்டல்-ஐ வைத்துக்கொண்டே
உறங்குகிறேன்,
பின்னும்,
தூக்கத்தில் சுடும் நோயும்
எனக்குண்டு

6)
அரிசியில் போலவே
எழுதப்பட்டிருக்கலாம்
துப்பாக்கியின் ஒவ்வொரு குண்டிலும்
நம் பெயர்களும்