குழந்தைமையில் மிதக்கும் கவித்துவம்: ப.தியாகு கவிதைகள்
– திரு.சமயவேல் அவர்கள் என் கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரை
வெகு எதார்த்தமான உண்மையான காட்சியெனினும், ஒரு குறிப்பிட்ட காட்சியை ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளி, அந்தக் காட்சிக்குள்ளேயே பிறிதொரு எதார்த்தத்தைக்
காட்சிப்படுத்த முனைகிறான். பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச்
செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதைக் கதைப் பரப்பில் தமிழில் கோணங்கி
போன்ற படைப்பாளிகளால் மீயெதார்த்த, மாய எதார்த்த வழிகளில் சாதிக்க முடிந்தது. செவ்வியல் இசைக் கலைஞர்கள் இதை ஆதிகாலம் தொட்டே, இசையின் உட்புறம் வெகுதூரம் பல அண்டவெளிகள் தாண்டி, பயணம் செய்து ஸ்தூலமற்ற அதன் மூல நாதவிந்துக்களுடன் உரையாடுதல் அல்லது விளையாடுதல் மூலம் சாதிக்க முடிந்ததுடன் அவர்கள் எப்பொழுதுமே எதார்த்தமற்ற
எதார்த்தத்தில் உலவுபவர்களாகவும், தங்கள் பயணத்தில், கேட்கிறவர்களையும் இணைத்துக் கொள்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். கட்புலனில் தீ மூட்டும் வண்ணங்களில் மூச்சைவிடும் ஓவியர்களின் கோதுமை வயல்களுக்குள்
முற்றாக உலவ முடிந்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் கவிஞர்கள் இதை மிக
எளிதாக, மொழியின் கட்டுமான
அலகுகளில் ஒன்றான சொற்றொடர் இயலின் அடைப்படை இலக்கணத்திற்குள் ஊடுருவி, அதை அடியோடு
புரட்டி, சொல்லின் பின்புறம் உள்ள சொல்லின்மையை உணர்த்துவதின் மூலம் சாதிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுமையுறும் மனிதம் போலவே, கவிஞர்களால் கவிதையை ஒவ்வொரு நாளும் புதுமைப்படுத்திக் கொண்டே வர முடிகிறது. ஒரு முழு வாக்கியத்தில் வினையை மாற்றாமல் எழுவாய் பயனிலை இரண்டையும் இடம் மாற்றுவதின் மூலம் மொத்தக் காட்சியே
தலைகீழாய் மாறிவிடும் கற்பனாதிசயம் நிகழ்த்துபவனாகக் கவிஞன்
இருக்கிறான். அவனது பிரத்யேகக் கற்பனை வெளிகளில் சொந்தமாய்
உருவாக்கும் ஒருசில சொற்கள் அல்லது ஒரு சொற்றொடர்
மூலமே பிறிதொரு எதார்த்தத்தைப் படைக்க முடிகிறது. இவர்கள் மொழியின் செல்லக் குழந்தைகள். மொழியை இவர்கள் ஏமாற்றுவதும், மொழி இவர்களை ஏமாற்றுவதும்
கவிதையைச் செழிப்பாக்குவதுதான் விந்தை.
எழுவாய், பயனிலையை இடம் மாற்றும் உத்தியைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதாத கவிஞர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த உத்தி, எதார்த்தத்திற்குள்ளும் ஒரு எதார்த்தமாய், இயல்புக்குள்ளும் ஓர் இயல்பாய், ஒரு கவித்துவ அறத்தை வினைப்படுத்தும், பேராச்சர்யம் கொண்ட கவித்துவ மாயத்தை எழுப்ப முடிகிற போது மட்டுமே கவிதையாகிறது. ஏனெனில்
கவித்துவ அறம் என்பது பேரளவில் பிரபஞ்ச ஒழுங்குகளிலிருந்தும், சிற்றளவில் நுண்மையின் நுண்மையான அடிப்படை உயிர்த்துகள்களாலும் கட்டமைக்கப்படுகிறது. இன்னுமொரு எளிய தளத்தில் ஆள்பவன்-ஆளப்படுபவன், அடிக்கிறவன்-அடிபடுகிறவன் என்னும் சமூக எழுவாய் பயனிலை இலக்கணங்களை உடைத்தெறியும் அறமாகவும்
இருக்கிறது. இன்னும் பற்பல தளங்களில், பல்லடுக்குகளில், அமைப்புகளின் அமைப்பாகவும், அதே விசையில் எல்லா அமைப்புகளின் எதிர் அமைப்பாகவும் கவிதை
செயல்படுகிறது.
மிகுதியும் குழந்தைகள் உலகில் வாழும் ப.தியாகுவின் இக் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே இந்த ரீதியிலான கவிதையாக
அமைந்துவிட்டிருக்கிறது. முதல் பத்தியில் எறிவதற்காகக்
குறிபார்த்து நிற்கும் சிறுவன். ஆனால் அடுத்த பத்தி “ஒரேயொரு பாறை/ ஓணானின் வசம்” என்று நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
சிறுவர்கள் ஓணான்களை கல்லடித்துக் கொன்று, அதன்மேல் சிறுநீர் கழித்து விளையாடுவது இயல்புதானே
என்பவர்கள் தான், வளர்ந்தபிறகு அணுசக்தியைப்
பயன்படுத்துவதும் இயல்பு என்பார்கள். சாதியத்தை வெகு இயல்பு என்பார்கள். கலவரங்களை உண்டாக்கி அப்பாவிகளைத் தீ வைத்துக் கொளுத்துவதும் கற்பழிப்பதும் கூட இயல்பென்பார்கள். ஓணான்கள் பாறைகளைத்
தூக்கி எறியும் அறத்தைக் கவிஞர்கள் மட்டுமே படைக்க முடியும்.
எப்போதும் ஏதேனும் ஒரு பிம்பத்தை உள்ளடக்கிய
கண்ணாடிகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட
ஆடிகள் கூடி நிகழ்த்தும் பிம்பங்களின் கூத்தில் மயங்காத
மனிதக் கண்கள் இருக்க முடியாது. ஆடி மாயை (optical illusion), காண் மாயை (visual
illusion) மற்றும்
மெய்மாயம் (virtual reality) போன்றவை சலனிக்கும் மாயத்தருணங்கள் கவிஞனின் வட்டப்பாதையில் நுழையும்போது கவிதையாக மாறுவது
இயல்பாக இருக்கிறது. பிம்பங்களின் உலகில் நாள்முழுவதும்
சஞ்சரிக்கும் இன்றைய இளம் கவிஞர்கள் இப்பரப்பில்
நிறையவே எழுதும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இத்தகைய தருணங்கள் இத்தொகுப்பில் சில அற்புதமான
கவிதைகளாகி இருக்கின்றன. அலமாரிக் கதவில்/பதிந்திருக்கும்
கண்ணாடிக்குள்ளிருந்து/கைகள் நீட்டி அழைத்து வைக்கிறாள்/நேற்றுத்தான் நிஷித்/ பெயர் சூட்டியாகிவிட்ட/ ‘ கண்ணாடி அம்மா’ வருகிற 10வது கவிதையில் காண்மாயையோடு குழந்தைமையும் கலந்துவிடுகிறது. குழந்தைகளுக்குக் கண்ணாடியைக் காட்டக் கூடாது என்று
பெரியவர்கள் கூறுவதில் பொருளில்லாமல் இல்லை. இந்த பிம்ப மாயக்
குழப்பங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம்
குழந்தைகளுக்குக் கொஞ்சம் வளர்ந்தபிறகே கிட்டும். இன்னும் அவர்கள் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் ஏராளமான வினோதங்கள்
காத்திருக்கின்றன. ஆனால் கவிஞன் எப்போதும் வளர விரும்பாத குழந்தையாக இருந்து
எல்லாப் புரிதல்களிலிருந்தும் அதைத் தொடரும் பொறுப்புகளிலிருந்தும்
தப்பிக்க விரும்புகிறான். 91வது கவிதையில் இருப்பது நாம் அடிக்கடி காண்கிற காட்சிதான். இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளில் குருவிகள் தங்களைத் தாங்களே கொத்திக் கொஞ்சும் காட்சிகளை எல்லோரும் பார்த்திருக்கிறோம்.
ஏற்கனவே இதை யாரோ எழுதியிருந்து படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் 92வது கவிதை முழுக்க, காண்-மாயை சார்ந்தது. இதுவும் ஒரு பழைய காண்படிமம் எனினும் ப.தியாகு, இக் கவிதையில் பச்சைப்
பாம்பை சிறு கொடியாக அங்கீகரிப்பதின் மூலம் தற்கால இளைஞர்களின் அக உலகை வெளிப்படுத்திவிடுகிறார். இவர்கள் தர்க்கங்களின் பிளவுக்குள்
சிக்கிக்கொள்ளாமல், மிக நுட்பமாகப், பார்த்ததைப் பார்த்ததாக ஏற்றுக் கொள்ளும்
அக்கண நியமத்தை வரித்தவர்களாக இருக்கிறார்கள். 106வது கவிதையில், இருக்கும் ஒரே
டீவியில் நிஷித்தும் ப.தியாகுவும் சோட்டா பீமையும் ஏலியன்
அணி கிரிக்கட் ஆட்டத்தையும் ஏககாலத்தில் பார்க்கும் வினோதம் நிகழ்கிறது. டீவிக்குள் டீவியை, கவிஞன் எப்போதோ உருவாக்கிவிட்டான்.
மேலே வருகிற நிஷித் என்ற குட்டிப்பையன் மற்றும் ஜனு, இஸபெல்லா முதலிய குழந்தைகள் மூலமாக
இத் தொகுப்பில் நிறையக் கவிதைகள் விளைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நிறைய இளம் கவிஞர்கள் திருமணம் ஆன கையோடு காணாமல் போவதை வருத்தமுடன் பார்த்து வருபவன் நான்.
எப்படியும் அவர்கள் மீண்டும் எழுத வந்துவிடுவார்கள் என்பதில்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்கள்
தங்களது மீள்வருகையை ‘நிஷித்’தைப் போன்ற குழந்தைகள் மூலம் நிகழ்த்திவிட முடியும். குழந்தைகள் ஒவ்வொன்றையும்
வினோதமாய்ப் பார்த்துப் பார்த்து, தங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு அசைவையும் ஒலியெழுப்பி, ஒரு படைப்பெனவே
நிகழ்த்தும் அதிசயங்களை பெற்றோர்கள் அவர்களது உடல் வழியாகவும் உயிர்வழியாகவும் அனுபவம் கொள்ளும் அற்புதக் கணங்கள் பல
சமயங்களிலும் கவித்துவத் தருணங்களாகவே இருக்கின்றன. இந்த உலகம் புத்தம்
புதுசாக நமக்கு மீண்டும் ஒருமுறை குழந்தைகள் வழியாகக் காணக்கிடைக்கிறது.
வாழ்க்கை பற்றிய உங்கள் அடிப்படைக் கருத்துக்களை ஒரு மீள்பார்வைக்கு
உட்படுத்தும் தருணமாகவும் இது அமையலாம். அப்படியே வாழ்வின் வழியாகவே
சென்று மறைந்து விடாமல், மீண்டும் நம்மைப்
படைப்பாளியாக நிலை நிறுத்தும் சக்தியை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டிய, வாழ்வின் ஒரு
முக்கிய திருப்பமாகவும் இது அமையக்கூடும்.
ப.தியாகு இந்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ப.தியாகுவின்
கவிதைகளில் இரு முக்கியமான கிளைகள் அசைவதைப் பார்க்கிறோம். ஒன்று குழந்தைகள் நிஷித் மற்றும் ஜனுவின்
மூலமாகக் காணும் வினோத உலகம். இரண்டாவது, குழந்தைகள் நிரம்பிய வீட்டில் வாழ்தலின் போதம், மொழி அழகியலாகத் துளிர்க்கும் கிளை. முன்பகுதியில் நாம் பார்த்த ‘கண்ணாடி அம்மா’ கவிதை நிஷித்தின்
வினோத உலகம் சார்ந்ததுதான். அதற்கு அடுத்த கவிதை “பள்ளி நிமித்தம் நிஷித்-ஐ பிரிதல்’ கொஞ்சம் பழைய வரிகளில் ஆகியிருந்தாலும் ‘பெயருக்குக் கூட/ பொம்மை வானமொன்று/ இருந்திருக்காது/சரிதானே பையா” என்னும் 4வது பத்தி காப்பாற்றிவிடுகிறது.
ஆட்டுக்குட்டி-மேய்ப்பன், விரல்களில் படும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் போன்ற
தேய்சொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ‘மான்மரம்’ என்னும் தலைப்பு உள்ள கவிதையில் கணத்துக்குக் கணம் தன்னிலையைப் புதுப்பித்துக் கொள்ளும் குழந்தைமையின் படைப்பு அழகியல், மிக எளிமையாக ஆனால் அற்புதமாக வெளிப்படுகிறது. இச்சிறிய கவிதை மானில் தொடங்கி, இலையுதிர்காலம் கடந்து, தளிர்விட்டு வசந்த காலத்தை அடைந்துவிடுகிறது
வண்ணச் சாக்கட்டிகளின் கோடுகளால். வாசிக்கும் மனம் நிரப்பும் கவிதை இது. “குமிழ்கள் அல்ல
கிரகங்கள்” கவிதையில் முதல் பத்தியிலிருந்து இரண்டாவது பத்திக்கு ஒரு கவித்துவ/தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது. சோப்புக் குமிழ்விடும் சிறுவனின்
உலகத்திலிருந்து கவிதை “உடைந்து சிதறும் அவைகளில்/ நீங்கள் எதையும் பார்க்கலாம்/
பார்க்க முடியாமல் முற்றாக உங்களை/ நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்.” என்று முடிகிறது. இதில்
சிறப்பு என்பது ‘நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்’ என்னும் ஆசுவாசம் தான்.
இதுதான் படிப்பவரையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் இன்றையக் கவிதையாகவும் இருக்கிறது. “கௌதம் ஆன
சித்தார்த்” கவிதையில், விபத்துக்குள்ளான நிழலுக்குக் களிம்பு தடவும் அபூர்வமான சித்தார்த்தைச் சந்திக்கிறோம். குழந்தைமையின் பித்தில் வெளிப்படும்
உச்சபட்ச அழகியலை இக் கவிதை கண்டடைகிறது. சத்தியம், ஞானம் போன்ற சொற்களைத் தவிர்த்திருந்தால் இக்கவிதை, ஒரு அற்புதச்
சிற்பமாகிவிட்டிருக்கும். “விடுபடலின் மந்திரம்” கவிதையில் நிஷித்தோடு நாமும் சேர்ந்து ‘நல்ல நல்ல ரொம்பது’ என்று கூறத் தோன்றுகிறது. ‘பாவம் தவளை’ என்று பாம்புக்கு வழி வரைய மறுத்து அடம் பிடிக்கும் இஸபெல்லாவை நம் தோழியாக்கிவிடுகிறது “வழி” கவிதை. இறுதிக் கவிதையாக வரும் “பக்கவாட்டில்” மேலும் ஒரு சிறிய கவித்தெறிப்பு. “தாய் யானையின்/ நிழலிலேயே நடக்கின்றன/ குட்டி யானைகள்/
வனாந்திரத்தில் // மின் துண்டிப்பு // இப்போது/டி.வி.பெட்டியின்
பக்கவாட்டில்/ பார்வையைச் சுழற்றுகிறான்
நிஷித்.” இந்தக் கவிதையையும் அந்தக் காண்_மாயை வகைக் கவிதைகளோடு சேர்க்கலாம். ஆனால் நிஷித் மட்டுமே இப்படிப்
பக்கவாட்டில் பார்வையைச் சுழற்ற முடியும். இக் கவிதை பார்த்தல், யானைகளைப் பார்த்தல், அதுவும் டி.வி.யில் பார்த்தல், பார்க்காமலே பார்த்தல் என்று இன்னும் பல தளங்களில் நமது
புரிதலின் எல்லைகளை விரிவுபடுத்தும் கவிதையாகவும் இருக்கிறது. “தந்தைமை” என்னும் கவிதை
தந்தைக்கும் குட்டிமகளுக்குமான உறவில் இருக்கும்
ஒருவிதப் புரியாமையை “என்னதான் கோருகிறது/ இரண்டு வயது மகளே/ உன்னிடமிருந்து/ எனதிந்த தந்தைமை” ஒரு கேள்வியாய் எழுப்புகிறது. நாம் உடனே ‘ஈடிபஸ் சிக்கல்’ என்று கூறிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் இது இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சிக்கலாகவே தெரிகிறது. அன்பின் அல்லது காதலின் அல்லது உறவின் விதைகள் பலப்பல வடிவங்களாய்த்
தளிர்க்கும் புள்ளிகளில், நமது பண்பாடு தானாக வெளிப்பட்டு மிக நுட்பமானதொரு எல்லைக்கோட்டை நமக்குக் காண்பிக்கிறது. இன்றளவும் இதை வெகு இயற்கையாகவும் இயல்பாகவும் நாம் பின்பற்றி வருகிறோம்.
இரண்டாவது கிளையான வாழ்தலின் போதமும் கவித்துவ
போதமும் பல கவிதைகளில் வெகு இயல்பாய் நிறைந்து கிடக்கின்றன.
ப.தியாகுவின் இத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளின்
நிலமும் அவரது வீடாகவே இருக்கிறது. குழந்தைகளும் நிறைவுகளும் கொண்ட இந்த வீட்டின் எல்லாக் காட்சிகளும், நிகழ்வுகளும், சலனங்களும் கவிதைகளாகிவிடுகின்றன.
“சிமெண்ட் தரையில்/ கையளவு தேங்கிய/கடலின்/கரையோரத்திலிருந்து/ இழுத்துவிட்டேன்/ விரல் நுனி கொண்டு// வேகமாய் வெளியேறுகிறது ஒரு சிறு நதி” என்று கடலும் நதியும்கூட இவரது வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகிறன. “எலிக்குஞ்சுகளோடு
எனக்கு குரோதமில்லை” கவிதையில் வீட்டுக்குள் வளையவரும் பூனையை விரட்டி ‘பிதுக்கிய பற்பசை நீளமே இருக்கும்’ எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றிவிடுகிறார். “இதற்குள்” என்ற கவிதையில் கண் திறந்தவுடனேயே ‘துறுதுறுவென்றிருக்கும்’ அப்பொழுதுதான்
பிறந்த நாய்க்குட்டிகள் இவரது கனவுக்குள் நுழைந்து கவிதையாகிவிடுகின்றன. வெகு இயல்பாகவே மனிதன் மீன்களுக்குச் செய்யும் துரோகம் இரண்டு கவிதைகளில் பதிவு செய்யப்படுகிறது. “எனக்குள் அலையும் மீன்” கவிதையில் முழுமீனின் முள்ளை உள்ளங்கைக்குள் வைத்து
மூடியவுடன் ‘அஃது உடலாகிறது/
எனக்குள் அலைந்து/ நானே/ மீனாகிறேன்.’ அழித்துப் படைக்கும் இந்தியக் கடவுளின் இடத்தை, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் கவிஞன் மிக எளிதாகக்
கைப்பற்றி விடுகிறான். இக் கவிதையின் பின்புறத்தில் கவிஞனும் கடவுளும் பகடிக்குள்ளாவது பிறிதொரு வாசிப்பில் நிகழ்கிறது. இன்னொரு மீன் கவிதை: “ஒரு கை நீரள்ளி/ மேல் தெளிக்கிறாள்/
துணுக்குற்றது போல/ கொஞ்சமே அசைந்து
கொடுக்கிறது/இன்னும் உயிரிருக்கும் மீன்// அதைத்தான்/ தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.” இரக்கமற்ற உண்மையை நம் முகத்தில் வீசுகிறது இக் கவிதை. நானும் மீன் சாப்பிடுகிறவன்தான். போலிமை மிக்க இந்திய மனம் இங்கு பகடிக்குள்ளாகிறது. “இன்னும் பருகவே இல்லை” கவிதையில் ‘தேயிலைப் பொட்டலத்தை விளையாட்டுப் போலவே மூழ்கடித்து மூழ்கடித்து
கரைக்கும்’ இவர் தேநீர் பருகாமலே, பருகிய நிறைவடைந்துவிடுகிறார். கவிஞனுக்கு மட்டுமே கிட்டும் வாழ்தலின் போதம் இதுதான். “மறந்து விடுகிறேன்” கவிதையில் கண்ணாடித்
தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கூட்டம் பறந்து கொண்டிருப்பதாகக் காண்பதும் இந்த போதத்தால்தான். அழகியலின் ஒரு பிரிவாய் இயங்கும் கவித்துவ போதமும்
வாழ்தலின் போதமும் ஒன்றுதான். இவை எல்லாவற்றின் ரகசியமும் ஒரு சிறிய கவிதைக்குள் அடங்கி இருக்கிறது. முதல் பத்தி: “சுருண்டு கழி போலிருப்பதின்/ இறுக்கம் குறைய/ அவிழ்ந்து
வருகிறது/ என்/ மனமென்னும் குருத்து.” கவிதையின் அடுத்த பத்தியில் “ஆசுவாசத்தின்/
ருசி பற்றி/ இலையானபின் எழுதுகிறேன்” என்கிறார். குருத்து விடுவதைப்போல ஆசுவாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், இலையாகி, கவிதையின் அடுத்த கட்டத்திற்கு
நகர்வார் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.
- சமயவேல்
03-11-2013.