5.11.14

கோவை



திருச்சி பேருந்து நிலையத்தில்
சுற்றித் திரிகிறதென்று
நாங்கள் அடையாளம் கண்டுகொண்டதை
தோள் பை மேஜிஷியன்தான்
சிறு சிறு சீட்டுகளாக
உருமாற்றிக் கையளித்தார்

வரைபடத்தின்
வெவ்வேறு பகுதிகள் போன்றதில்
ஒன்றிரண்டை காணாமலடித்தாலும்
சிதைவைப் பொறுத்து
உக்கிரமடைவாரென்று தெரியும்
அவரும்

இரு கையோடும்
ஸ்டீரியங்கைப் பற்றி
முன் வீற்றிருக்கும் தெய்வமே

கிழக்கின் ஹோல்டரில்
விளக்கு தன் கண் திறந்து
திடுக்கிடுவதற்குள்ளாக
யாதொரு குலைவும் நேராதபடிக்கு
நாம்
முன்னிருந்த இடத்திலேயே
வைத்துவிட வேண்டும்
இந்தக் கோவையை


லேசு



மொத்த பாரத்தையும்
கடலாழத்தில் கொட்டிவிட்டு
திரும்புபவன்
ரொம்பவும் லேசு
மிதந்தே
கரை சேருமளவு
அந்த லேசு


4.11.14

சக்கரம் வரைந்த சாலை ஓவியம்



க்கரம்
வரைந்து நகர்ந்த
சாலை ஓவியத்தில் சேராமல்
பிரிந்து வருகிறது
வர்ணம் சிவப்பு

பிறர் இடுவது அல்லாது
ஐநூறு
நூறென
தானே விசிறிவிட்டிருக்கும்
தாள்களை உற்றுப் பார்ப்பவர்கள்
தவற விடும் தத்ரூபம்

முற்றுப் பெறாததெனத் தோன்றும்
இன்னும்
ஈரம் காயாத இதுதான்
முழுமையிலிருந்து
சிதைவைச்சொல்லும்
சித்திரங்களின் சித்திரம்

சுற்றுக்கோட்டின்
ஒழுங்கற்ற சுழியத்தை
சுவடென விட்டு
ஸ்ட்ரெச்சர் சட்டமேறிவிட்ட
கலைப்படைப்பு இதை
வாங்குதற்கும்
யார் வருவாரோ.

2.11.14

கோடி மீன்கள்




உதறினாற்போல் விரிக்கப்பட்ட
துகில் அங்காடியின்
வெளிர் நீல நிற சீலை
உயர எழுந்தடங்கி
உறைந்த கடலானது

இங்கு
கரையோரம் அமர்ந்தபடி
அலைகளை தன்
விரல்களால் வருடும் -
இவனில் பாதியானவள்
காணாது

நெகிழ்ந்து சலம்புகின்றன
நதியொன்றின் கோடி மீன்கள்
எதிரில்
தோன்றி நிற்கும்
கடற்கன்னியுள்
நீந்திட

மது - கவிதைகள்




i)

மூடியை
எதிர்க் கடிகாரச்சுற்றில்
திருகுவதுதான்
புட்டியை திறப்பது

முடிவில்
புட்டியிடம் பிதற்றிக்கொண்டிருந்தேன்

தலை சுற்றுகிறது
நீதான் என்னை
திறந்துகொண்டிருப்பதா

ii)

கடைவாய்ப் பற்களின்
துணைகொண்டு பிளக்கிறேன்
இறுக மூடிய
தகடும் சீஸாவுமான
உதடுகளை

நீங்கள் செவி மடுக்க
மௌனம் கலைத்து
இந்த
புட்டி நிறை பியர்
பேசவும்
எத்தனை இருந்திருக்கிறது

குறிப்பாக
என் குரலில்