28.5.15

கல் கவிதைகள்


1)

தழுவலின் போதெல்லாம்
தளர்த்திய ஆடைகளை
தன்போக்கில் அடித்துப்போனது
நதியே

கூழாங்கல்லோடு நாம்
காண்பதுதான் என்ன
கல்லொன்றின்
அம்மணம் அல்லவா

2)

கல் தேவதை
கல் ஸ்தனங்கள்

இரங்கவே இரங்காத மனசு
கல்
                                                          
3)

கல் மேலெழும்பவென
குடத்தினுள்
நீர்மேல் நீராய்
வார்த்துக்கொண்டிருக்கிற
மடக் காகம் நான்தான்

கல்
கல்தான்


21.5.15

இரண்டு கவிதைகள்


1)

கனன்றுகொண்டிருக்கிற
சிறு கங்கு போல
மேலிருந்து
சுடர்ந்திருக்கும் இரவு விளக்கு
ஆரஞ்சு வர்ணம்

அடுத்தடுத்து
உடைகள் நீங்கிய
உடல்களை பார்க்கையில்
தோலுரித்த
சுளைகளேதான் நாம்.


2)

பிளந்து வைக்கப்பட்ட
மாதுளம் பழம்

சிதறி உருளும் எனில்
ந.பெரியசாமியின்
சிவந்த கண்ணீர்த்துளிகள்

அதனறைகளிலேயே வைத்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

தேனடை.

6.5.15

கரப்பான் கவிதைகள்


1)

அடுத்தடுத்த வரிகளோடு
அலையாது
கவிதையின்
முதல் வரியெனவே
உறைந்து நிற்குமொரு
கரப்பான்

முன்விரியும்
தாளே
தன்னைக் கொல்லும்
சாக்கட்டித் தீற்றலோவெனத்
திகைத்து

2)

தனக்கு
முழுநீளக் கையாக ஆன
துடைப்பம்
ஒன்றில்தான் அறைந்தாள் ஓங்கி

சிறகுகள் நடுங்க
செத்துப்போன கரப்பான்
சற்றைக்கெல்லாம்
சில நூறு கால்களால்
நடந்து
இடம்பெயர்ந்தபோதும்
ஒரு வீறிடல்