9.9.15

இரண்டு கவிதைகள்



1)

தேவன்
வானுலகிலிருந்து ஏவிய
மழையில் தொடங்கி,
வலுத்து
வெளியே
தெருக்கள்தோறும் புரளும்
பெருவெள்ளம்.

நோவாவின் பேழையென
மிதந்திருக்கும்
பலமற்ற அஸ்திவாரத்திலான
ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில்
உறைந்திருக்கிறோம் பிழைத்து,
நீ
நான்
குழந்தைகள்
சுவரில் பல்லி
சிலந்தி
மற்றும்
தரையில் சிற்றெறும்புகள் சில.

கூரை விரிசலில் ஒழுகி,
சரியாக
நெகிழியில்
சரியும் நீர்,
சற்றுமுன்தான்
சந்தையில் துள்ளி
இந்த சமையலறையில்
விழுந்த மீன்களை,
நீந்தப்பண்ணிவிட
பரபரப்பதை கவனித்தாயா...


2)

நிலவை
குடைந்து செய்த கோப்பையோடு
நீ பரிமாறிய
நீர்ம இரவில்
போதாமை என்கிறேன்

சிறு கரண்டி துருத்திக்கொண்டிருக்கும்
கிண்ணத்தை
என் பக்கமாக நகர்த்துகிறாய்

கொஞ்சமும் நக்ஷத்திரங்களைச் சேர்...


- நன்றி: ‘காலச்சுவடு’ செப்டெம்பர் 15 இதழ்


நண்டுகளில் அலைவுறும் சிசுவின் பாதங்கள்



உறைந்த இருளென
நீலக்கடற்
கரைகொண்டிருக்கும் பாறை.

பிரித்தறியவியலா
அவயமே போல்
அதன்
வண்ணத்திலேயேயிருந்து
பற்றி நிற்கும்
ஒன்றிரண்டு நண்டுகள்.

அளவில்
பெரியதும் சிறியதுமான அலைகள்
மோதி மோதி
நுரைக்கக் கழுவியும்
வெளுத்திடாத நண்டுகள்
பெயர்வது அவ்வப்போது,

உள்ளிருந்து அலைவுறும்
கர்ப்ப கால சிசுவின்
பாதங்களைப் போல

மற்றும்

பாறை வயிறு
அங்கங்கே புடைக்கும்படியாக.

-  நன்றி: ’படிகம்’ கவிதைகள் இதழ்